Monday, 16 October 2017

ஏன் இன்றைய ஊடகங்கள் எதிர்மறை எண்ணங்களை விதைக்கின்றது என்று யாராவது சிந்தித்ததுண்டா?

ஏன் இன்றைய ஊடகங்கள் எதிர்மறை எண்ணங்களை விதைக்கின்றது என்று யாராவது சிந்தித்ததுண்டா?
.

2012 இல் உலகம் அழிந்துவிடும் என்று திட்டமிட்டு தொடர்ச்சியாக வதந்திகள் பரப்பப்பட்டது. அதன் விளைவாக 2009 இல் வெளியான 2012 என்னும் திரைப்படம் உலகம் முழுக்க திரையிடப்பட்டு 770 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்து கொடுத்தது.
.

ஊடகங்கள் (தொலைகாட்சி, நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்கள்) தொடர்ச்சியாக எதிர்மறையான செய்திகளை வெளியிடுகின்றன. இதன் மூலம் நமது கவனத்தை எளிதில் ஈர்க்க முடியும் என்று அவர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள். இதன் காரணமாகவே உயிர்கொல்லி வியாதிகள் மற்றும் வன்முறைகள் பெருகிவிட்டதாகவும், நாம் அசாதாரணமான சூழ்நிலையில் வாழ்வது போன்ற பிம்பத்தை உருவாக்குகிறார்கள். இவை அனைத்தும் விளம்பர வருவாய்க்காகவும் வியாபார விருதிக்காகவுமே நிகழ்த்தப்படுகின்றன. இது தெரியாமல் இவர்கள் கிளப்பும் வதந்திகளை நம்பி பலர் குழப்பத்திலே வாழ்ந்து வருகின்றனர்.
.

உதாரணமாக தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்படும் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்சிகளை எடுத்துக்கொள்ளலாம். மக்களை பயமுறுத்துவதே இவர்களது நோக்கமாக இருக்கும். இதன் உச்சமாக நேற்று 2.10.2017 ஒரு தாய் தன் குழந்தைக்கு மருத்துவர்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக கூறி இருக்கிறார்கள். வைத்திய செலவிற்கு பணமில்லாமல் பயத்துடன் குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்த தாய் மனம் வருந்தி குழந்தையை கிணற்றுக்குள் வீசி கொன்றுவிட்டு தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
.

ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு இல்லாததாலே இத்தகைய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் என்பது நாம் பயப்படும் அளவிற்கு பெரிய வியாதியல்ல உடலின் நோயெதிர்ப்பாற்றலின் செயல்முறைதான் எனவும் அதைதான் ஊடகங்கள் மிகப்படுத்தி செய்திகளை வெளியிடுகிறார்கள் என்று அந்த தாய்க்கு தெரிந்திருந்தால் இப்படியொரு முடிவை எடுத்திருக்க மாட்டார்.

ஏன் நாம் எதிர்மறை சிந்தனைகளால் ஈர்க்கப்படுகிறோம் என்கிற காரணத்தை உளவியல் ரீதியாக விளக்குகிறார் பிரபல மனநல மருத்துவர் கார்த்திகேயன்.

"நல்ல சிந்தனை வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. கெட்ட சிந்தனை எளிதில் வருகிறது.

ஒரு கண் பார்வையற்ற மனிதன் மலை ஏறி சிகரத்தைத் தொட்டான் என்று செய்தி வந்தால் கூடப் பெரிய ஊக்கம் தோன்றுவதில்லை. சாதிச் சண்டையில் சதக் சதக் என்று குத்தினான் என்றால் ஆர்வமாய்ப் படிக்கிறோம்.

ஒருவரைப் பயமுறுத்துதல் எளிது. பெரிய அறிவு ஏதும் வேண்டியதில்லை. ஒரு பொய்த் தகவல் கூடப் போதும். ஆனால் ஒருவரை மகிழ்விப்பது பெரும் பணி. நிறையத் திறன் தேவைப்படுகிறது.

“உங்கள் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் உள்ளது” என்று பதற்றமாக யாராவது சொன்னால், “எனக்கு ஏதும் மின்னஞ்சல் வரவில்லையே! வெடி குண்டு வைத்ததற்கு ஏதும் சாட்சி உண்டா? ” என்று எந்த அறிவுஜீவியும் கேட்கமாட்டார். முதல் வேலையாக வெளியே எழுந்து ஓடுவார்.

அதே போல, கோபப்படுத்துவதும் எளிது. ஒரு சிறு கொசு கூட அதைச் செய்ய முடியும். உங்களுக்கு வேண்டாதவர் பற்றிய சிறு எண்ணம் கூடப் போதும். அதனால்தான் மிகச்சிறிய தூண்டுதலில் கூடப் பெரும் வன்முறைகள் நடந்துவிடுகின்றன.
.

ஏன் இப்படி?

நம் மூளை அப்படி உருவாகியுள்ளது. அதுதான் காரணம். அடிப்படையில் நம் மனித மூளை இன்னமும் பிரதானமாக ஒரு மிருக மூளை தான். முதுகுத் தண்டின் மேற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள மூளையின் பின் பகுதிதான் புலனறிவுகளின் செயலகம்.

அச்சம்தான் நம் முதல் உணர்ச்சி. கோபம் கூட அடுத்த கட்டத்தில்தான் தோன்றுகிறது. அதனால்தான் அச்சத்தை நம் மூளை தேடிப் பிடித்து உள்வாங்கிக்கொள்கிறது.

“உங்கள் குழந்தையின் உணவில் போதிய போஷாக்கு இருக்குதா?

உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்குதா?”

என்றெல்லாம் கேட்கும் விளம்பரங்கள் அடிப்படையில் அச்சத்தை உருவாக்கி அதன் மூலம் விற்பனையை வளர்க்க நினைக்கின்றன. காரணம் அச்சம் நமக்குச் சுலபமாக வரும்.
மூளையின் முன்பகுதி நவீனமானது. பல ஆயிர வருடங்களின் பரிணாமத்தில் வந்த நிர்வாக மூளை அது.

சிந்தனை, பகுத்தறிவு, திட்டமிடுதல், செயலாக்கம் என மனிதனின் முன்னேற்றத்துக்கு ஆதாரமான அனைத்தும் இங்குதான் செயல்படுத்தப்படுகின்றன. அதனால் கூர்ந்து நோக்குவது, யோசிப்பது, புதிதாகப் படைப்பது, நகைச்சுவை, நம்பிக்கை எல்லாம் சற்று பக்குவமான மனநிலையில் மட்டுமே ஏற்படுபவை.

அடிப்படை உணர்ச்சிகள் எதிர்மறையான கெட்ட எண்ணங்களை வளர்க்கும். பக்குவப்பட்ட உணர்ச்சிகள் நேர்மறையான நல்ல எண்ணங்களை வளர்க்கும்.

இது இரு வழிப்பாதையும் கூட. எதிர்மறை எண்ணங்கள் அச்சம், கோபம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளை வளர்க்கும். நேர்மறை எண்ணங்கள் மகிழ்ச்சி, நம்பிக்கை போன்ற பக்குவப்பட்ட உணர்ச்சிகளை வளர்க்கும்!

இன்னொரு விஷயமும் உள்ளது. நெருக்கடியான நிலையில் பின் மூளை உடனடியாகச் செயல்படும். முன் மூளை சற்று நேர மெடுக்கும்.

நீங்கள் உங்கள் மனைவியிடம் சின்ன வாக்குவாதம் செய்கிறீர்கள். அவர் சொன்ன ஒரு வார்த்தையில் சற்று நிதானமிழந்து நீங்கள் பதிலுக்கு அவர் குடும்பத்தையும் சேர்த்துத் திட்டிவிடுகிறீர்கள். பின் சில நொடிகளில் செய்த பாதகமும் அதன் பின் விளைவுகளும் புரிகின்றன.

உங்கள் மனைவி ஒத்துழையாமை இயக்கம் நடத்தலாம். பதிலுக்கு நம் குடும்பத்தினரின் மொத்த வரலாறும் வரிசை மாறாமல் வரலாம். குறைந்த பட்சம் அன்றைய நிம்மதியும் தூக்கமும் போகலாம். இதெல்லாம் புரிந்து, “நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை..!” என்றெல்லாம் சொல்லிச் சமாளிக்கிறீர்கள்.

ஆனால் உங்கள் பின் மூளை செயல்பாட்டின் தாக்குதல் உங்கள் மனைவியின் பின் மூளையைத் தாக்க, “எல்லாம் சொல்லிட்டீங்க. உங்க புத்தி தெரியாதா?” என்று கோபத்தில் எழுந்து போகிறார். பின் அவரின் முன் மூளை சற்று பகுத்தறிவுடன் யோசித்து, “குழந்தைங்க முன்னாடி சண்டை போட்டா அது அவங்களை பாதிக்கும். ஹூம்.. அவர் எப்பவும் இப்படித்தான் புதுசா என்ன?” என்று சமாதானமாகிறார்.

ஒரு உறவில் ஏற்படும் உரசலின் அனாடமி இது. அதனால்தான் சொன்னேன். அச்சம், கோபம், போன்ற நெகட்டிவ் எண்ணங்கள் எல்லாம் முந்திக் கொண்டு வருகின்றன. அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை, போன்ற பாஸிட்டிவ் எண்ணங்கள் அவ்வளவு இயல்பாக வருவதில்லை. அதற்கு நிறைய முயற்சியும் பயிற்சியும் தேவைப்படுகின்றன.

வாழ்க்கையில் சிக்கல்கள் இல்லை. அதை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் சிக்கல்கள் உள்ளன. நம் வாழ்க்கையில் நடப்பவை நம்மை துன்புறுத்துவதில்லை. அதைப் பற்றி நாம் எண்ணும் எண்ணங்கள்தான் நம்மை துன்புறுத்துகின்றன.

நம்மால் நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் மாற்ற முடியும். மூளையும் மனமும் இசைந்து அற்புதங்கள் நிகழ்த்தலாம்!

இதுதான் உலகின் அத்தனை மதங்களும் ஒரே குரலில் சொல்லும் மந்திரம்!"

No comments:

Post a Comment