சிவனே அனைத்திற்கும் மூலாதாரம்
இறைவன் ஒருவன் அவனே பரம்பொருள், அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் ஒருவனே மெய்ப்பொருள். அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை.
இறைவன் பசுபதி எனப் போற்றப்படுகின்றான். பசு என்றால் ஆன்மா. பதி என்றால் தலைவன். எனவே ஆன்மாக்கள் அனைத்திற்கும் தலைவன் இறைவன். அவனைச் சிவம் எனப் போற்றப்படுவது சைவமரபு.
இறைவன் எங்கும் நிறைந்தவன். அவன் சத்து(உள்பொருள்) ஆகவும் சித்து(அறிவுடையபொருள்)ஆகவும். ஆனந்தம்(இன்பமயமானபொருள்)ஆகவும் விளங்குகின்றான். ஆதலால் சச்சிதானந்தன் எனவும் அழைக்கப்படுகின்றான்.
இறைவன் அருவம், அருவுருவம், உருவம் என்றும் மூன்று திருமேனிகளை எடுத்து ஆன்மாக்களுக்கு அருள் புரிவான்.
1.தன்வயத்தனால்
2.தூய உடம்பினனாதல்,
3.இயற்கை உணர்வினனாதல்,
4.முற்றும் உணர்தல்,
5.இயல்பாகவே பாசங்களில் நின்றும் நீங்குதல்,
6.பேரருள் உடைமை,
7.முடிவில் ஆற்றலுடைமை, 8.வரம்பில் இன்பமுடைமை.
ஆகிய எண்குணங்களையும் உடையவன்.
அன்பே சிவம்
‘அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே’ – திருமூலர் திருமந்திரம்.
அன்பே சிவம் என்றார் திருமூலர். அன்பு வேறு சிவம் வேறு அல்ல. இரண்டும் ஒன்றே . அன்பு தான் சிவம் ஆகவும் சிவம் தான் அன்பு ஆகவும் விளங்குகின்ற உண்மையை இத்திருமந்திரப் பாடல் உணர்த்துகிறது.
இந்த உலகிலுள்ள அனைத்திலும் கடவுள் நிறைந்திருப்பதால், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல் அவசியமாகின்றது. உயிர்களுக்கு செய்யும் அன்பு இறைவனுக்குச் செய்யும் அன்பாகும். உயிர்களுக்குச் செய்யும் தீமை இறைவனுக்குச் செய்யும் தீமையாகும்.
எல்லா நன்மைகளும் அன்பிலிருந்து தான் ஊற்றெடுக்கின்றன. எல்லாத் தீமைகளும் அன்பின்மையிலிருந்தே உருவாகின்றன. அன்பின்மை சிவநிந்தை ஆகும். அது சுயநலத்தை வளர்க்கின்றது. சிவத்தை மறுப்பவர்கள் அன்பை மறுக்கின்றார்கள். அன்பை மறுப்பவர்கள் வாழமறுக்கிறார்கள் என்னும் உண்மையைச் சைவநெறி காட்டுகிறது.
சிந்தனை, பேச்சு, செயல் என்பவற்றினால் அன்பு வெளிப்படும்போது தான் சிவ தரிசனம் செய்வதாக அமைகின்றது. அப்போது தான் சர்வம் சிவமயம் என்பது உணரப்படுகிறது.
இறைவன் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்து நிற்கிறான். அவ்வாறு எங்கும் வியாபகமாய் உள்ள இறைவனை உணர்வதற்கு உருவம் துணை செய்கிறது. உருவம் உள்ளத்தில் பதிவது போல அருவம் பதிவதில்லை. ஆதலால் இறைவனின் திருவுருவம் அழகிய விக்கிரகங்களாக அமைக்கப்பட்டு திருக்கோயிலில் வைத்து வழிபடப்படுகிறது.
No comments:
Post a Comment