===========================================
*தமிழர் வேலைகளைப் பறிக்காதீர் !*
*வெளி மாநிலத்தவர்களே திரும்பிப் போங்கள் !*
===========================================
*மனிதச் சுவர் போராட்டம்..!*
===========================================
2019 *திசம்பர் 20* - வெள்ளி காலை 10 மணிக்கு
*சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்பு*
===========================================
தலைமை - தோழர் *கி. வெங்கட்ராமன்*
பொதுச்செயலாளர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
===========================================
சென்னை நடுவண் (சென்ட்ரல்) தொடர்வண்டி நிலையம் முன், ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் தமிழர்கள், அடுக்கடுக்காக மனிதச்சுவர் போல் நின்று முழக்கங்கள் எழுப்பும் அறப்போராட்டத்திற்கு உங்களை அழைக்கிறோம்!
எதற்காக மனிதச்சுவர்?
-------------------------------------
அயல் மாநிலங்களில் இருந்து அன்றாடம் பல்லாயிரம் பேர் தொடர்வண்டிகளில் சென்னை வந்து தமிழ்நாடெங்கும் பல வேலைகள் பார்த்து இங்கேயே தங்கி விடுகிறார்கள். இந்த வெளியார் வரத்து இதேபோல் தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழர்களின் எண்ணிக்கைக்குச் சமமாக வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை உயர்ந்துவிடும்.
மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்குரிய வேலைகளை வடமாநிலத்தவர்களும் மற்ற அயல் மாநிலத்தவர்களும் பறித்துக் கொள்கிறார்கள். நம்மவர்கள் வேலை இன்றித் தவிக்கிறார்கள்.
“குறைந்த கூலிக்கு, அதிக நேரம் வேலை செய்கிறார்கள்; கொட்டகை போட்டு தங்க வைத்து வேலை வாங்குகிறோம்” என்று, தொழில் நடத்தும் நம்மவர்கள் “ஞாயம்” பேசுகிறார்கள்.
வடவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகி, அவர்கள் தங்கும் காலமும் அதிகமானால், தமிழ்நாட்டுத் தொழில் உரிமையாளர்களை அவர்கள் ஆதிக்கம் செய்வார்கள். தொழில் உரிமையாளர்களாகவும் அயலார் மாறிவிடுவார்கள்.
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வட்டிக்கடை வைக்கவும் சிறு தொழில்கள் தொடங்கவும் வந்த மார்வாடிகளும் குசராத்திகளும் இன்று தமிழ்நாட்டின் எல்லாத் தொழிலையும் எல்லா வணிகத்தையும் கைப்பற்றி அவர்களே, ஏகபோக மொத்த உரிமையாளர்களாக இருக்கிறார்கள். அவர்களின் தயவை எதிர்நோக்கும் இரண்டாம் நிலை மூன்றாம் நிலை சில்லறை விற்பனையில், சிறுதொழிலில் நம்மவர்கள் இருக்கிறார்கள்.
மரபு வழியாக வட்டித் தொழில் செய்து வந்த தமிழர்களை, நகைத் தொழிலும் நகைக் கடையும் நடத்தி வந்த தமிழர்களை வட இந்திய முதலாளிகள் விரட்டி விட்டார்கள். நம்மவர்கள், வறுமையுற்று பலர் தற்கொலை செய்து கொண்டார்கள்.
தமிழ்நாடெங்கும் இன்று நகைக்கடை வைத்திருப்போர் மலையாளிகள், வட இந்தியர்கள், ஆந்திரத் தெலுங்கர்கள்! காதில் மிளிர்ந்த தங்க நகையைக் கழற்றி வீசிக் காக்கை விரட்டிய தமிழச்சிகள் பற்றி சங்க இலக்கியம் கூறுகிறது. மேலை நாடுகளுக்கும் கீழை நாடுகளுக்கும் பற்பல பொருட்களை, நகைகளை, ஆடைகளை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றுமதி செய்த தமிழர்நாட்டில் இன்று அயலாரே தொழில்துறையிலும் வணிகத்திலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
வடவர்கள் முதலாளிகளாக மட்டுமல்ல, தொழிலாளிகளாகவும் வந்து குவிகிறார்கள். தமிழ்நாட்டில் வடநாட்டுத் தொழிலாளிகளின் நலன் காக்க, அவர்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றைக் காக்க, அந்தந்த மாநில அரசுகள் அக்கறை காட்டுகின்றன. ஒரிசா தொழிலாளிகளுக்காக சென்னையில் பள்ளிக்கரணையிலும், திருப்பூரிலும் அம்மாநில அரசு ஒரிசா பவன் திறந்துள்ளது. வெளியில் வாழும் மலையாளிகள் உரிமைகளுக்காக கேரள அரசு சென்னையில் அலுவலகம் வைத்துள்ளது. தமிழன்னை மடியில் அவள் பிள்ளைகள் அனாதைகள் போல் வாழ்கின்றனர்; அயல் இனத்தார் கோடீசுவர வாழ்வும் ஆணவப் போக்கும் கொண்டு வாழ்கின்றனர்.
பெருநிறுவனத் தொழில்மயமும் வெளியார் மயமும்
----------------------------------------------------------------------------------
வெளிநாட்டுப் பெருநிறுவனங்கள் பெருத்த மாநிலம் தமிழ்நாடு. அவற்றின் முதலாளிகள் அயல் இனத்தார்; வேலை செய்யும் தொழிலாளிகளில் பெரும்பாலோர் வெளி மாநிலத்தவர். தமிழர்களின் வேளாண் நிலங்களை அழித்து, ஆற்று நீரையும் ஊற்று நீரையும் காலி செய்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி கொள்ளை இலாபம் அடிக்கும் இப்பெரு நிறுவனங்களில் தமிழர்களுக்கு பெரும்பான்மை அளவில் வேலை இல்லை.
இந்திய அரசு நிறுவனங்களில் வடவர்
-----------------------------------------------------------
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களான தொடர்வண்டித்துறை, படைக்கல உற்பத்தித் தொழிற் சாலைகள், பெட்ரோலியம், எரிவளித் துறை, பி.எச்.இ.எல்., நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் - அனல் மின் நிலையங்கள், வங்கிகள, அஞ்சல் துறை, துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் முதலிய பல நிறுவனங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு வேலை வெளி மாநிலத்தவர்களுக்கே வழங்கப்படுகிறது. இவ்வேலைகளுக்காக அனைத்திந்திய அளவில் தேர்வு நடத்தி தமிழ்த் தேர்வர்களை வஞ்சகமாகப் புறக்கணிக்கிறார்கள். பல்வேறு தகுதிகளில் கல்வி கற்று, வேலை தேடிப் பதிவு செய்து உரிய வேலை கிடைக்காமல் காத்திருப்போர் தமிழ்நாட்டில் 90 இலட்சம் பேர்! இவர்களுக்குத் தமிழ்நாட்டில் வேலை கிடைக்காது என்றால் வேறு எங்கு கிடைக்கும்?
மற்ற மாநிலங்கள்
----------------------------
கர்நாடகம், குசராத், மராட்டியம், சத்தீசுகட், மத்தியப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் மாநில அரசு, இந்திய அரசு, தனியார் துறை ஆகியவற்றில் மண்ணின் மக்களுக்கு வேலை ஒதுக்கீடு செய்யும் அரசு ஆணைகளையும் சட்டங்களையும் இயற்றியுள்ளார்கள். தமிழ்நாட்டில் அவ்வாறான சட்டம் இயற்றவில்லை. மாறாக, இந்தியா முழுவதும் உள்ளவர்கள் தமிழ்நாட்டு வேலைகளுக்குப் போட்டி போடலாம் என்று சட்டம் இயற்றியுள்ளது தமிழ்நாடு அரசு! தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே என்று கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து போராடி வருகிறது.
நமது கோரிக்கைகள்
---------------------------------
1. வெளி மாநிலத்தவர்கள் மிகையாக வந்து குடியேறுவதைத் தடுக்க நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றில் இருப்பதுபோல் தமிழ்நாட்டில் உள் அனுமதி (Inner Line Permit) வழங்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசு பெற வேண்டும். வரைமுறை இன்றி தமிழ்நாட்டில் குடியேறும் வெளி மாநிலத்தவரை இச்சட்டப்படி தடுக்க வேண்டும்.
2. இந்திய அரசின் ஒப்பந்தப்படியும் உச்ச நீதிமன்ற ஆணைப்படியும் அசாமில் நடந்த மண்ணின் மக்கள் கணக்கெடுப்பு போல் தமிழ்நாட்டில் 1956 நவம்பா 1க்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்தோர் மற்றும் அவர்களின் வாரிசுகள் மட்டுமே தமிழ்நாட்டுக் குடிமக்கள் என்று அறிவித்து, அவ்வாறில்லாத வெளி மாநிலத்தவர்களை அவரவர் தாயக மாநிலத்திற்குத் திருப்பி அனுப்ப வேண்டும்.
3. தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு வேலை மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். பத்து விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவர் அனைவரையும் வெளியேற்ற வேண்டும். இவ்வேலைகளுக்கு அனைத்திந்தியத் தேர்வு நடத்துவதைக் கைவிட வேண்டும்.
4. கர்நாடகம், குசராத் மாநிலங்களில் இருப்பதுபோல் மாநில அரசு, இந்திய அரசு, தனியார் துறை ஆகியவற்றில் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு வேலை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு சட்டமியற்ற வேண்டும்.
மனிதச்சுவர்
--------------------
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து, இதற்கான முழக்கங்களை எழுப்பி 20.12.2019 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நடுவண் (சென்ட்ரல்) தொடர்வண்டி நிலையம் முன் மனிதச்சுவர் போராட்டம் நடைபெறும்!
சமூக வலைத்தளங்களில்
-----------------------------------------
போராட்ட நாளான திசம்பர் 20 அன்று காலை 8 மணி முதல் சுட்டுரை (ட்விட்டர்), முகநூல் (பேஸ்புக்) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் #TamilnaduJobsForTamils #தமிழகவேலைதமிழருக்கே ஆகிய குறிச்சொற்களைக் (Hashtag) கொண்டு, இச்சிக்கல் குறித்த சமூக வலைத்தளப் பரப்புரை இயக்கம் நடைபெறுகிறது!
தமிழர்களே, மண்ணின் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் போராட்டம் இது! அது மட்டுமல்ல, இந்திய அரசமைப்புச் சட்டப்படி தமிழர்களின் மொழிவழித் தாயகமாக 1956 நவம்பர் 1இல் அமைக்கப்பட்ட நமது தாயகம் பறிபோகாமல் தடுக்கும் போராட்டம் இது!
#TamilnaduJobsForTamils
#தமிழகவேலைதமிழருக்கே
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
No comments:
Post a Comment