Thursday, 19 December 2019

மத அடிப்படையில் மக்களைப் பிளக்கும் மத்திய அரசே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு!

மத அடிப்படையில் மக்களைப் பிளக்கும் மத்திய அரசே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு!
இந்துக்களை சாதி அடிப்படையில் நிலையான ஏற்றத்தாழ்வு கொண்ட, பிளவுண்ட சமூகமாகவும், பிற மதப் பிரிவுகளை பகை சக்திகளாகக் கற்பித்து, அம்மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிவிடவும், மேல்சாதி மேலாண்மையையும், ஆளுகையையும் ஏனைய மக்கள் மீது நிரந்தரப்படுத்துவதற்காகவும், இந்தியாவை ஓர் 'இந்து ராஷ்டிரம்' ஆக மாற்றியமைக்கும் நோக்கத்தோடு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும், நாடு முழுவதும் மக்களின் எதிர்ப்பையும் மீறி இந்துத்துவ பா.ஜ.க அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இதை ஏற்க மறுத்து அசாம், மேகாலயா, திரிபுரா, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மக்களும், மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை ஒடுக்க இந்திய இந்துத்துவ அரசு இராணுவத்தைப் பல இடங்களில் இறக்கியுள்ளது.
மக்களின் சமத்துவத்தை மறுக்கும் இச்சட்டத்தை மறுத்து இந்தியா முழுவதும் கடும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அசாம் மாநிலத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். டில்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறை கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. மேலும் பல பகுதிகளில் காவல்துறையின் அத்துமீறல்களும், காவல்துறையே முன்னெடுத்த வன்முறைகளும் நடந்தேறியுள்ளன.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பயன்படுத்தி மக்கள் விரோத, மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கக் கூடிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் மதச் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பல சட்டங்களை பா.ஜ.க அரசு நிறைவேற்றி வருகிறது.
மக்களை மதத்தின் பெயரால் துண்டாடும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று மறுக்கும் உரிமை மாநிலங்களுக்கு இல்லை என்று இந்துத்துவ மதவெறி பா.ஜ.க அரசு மிரட்டல் விடுகிறது. தனக்கிருக்கும் அளவிடமுடியாத அதிகாரத்தையும், இராணுவ-காவல் படை வலிமையையும் பயன்படுத்தி, மேல்சாதி மேலாண்மையை நிரந்தரப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வஞ்சகத் திட்டமான இந்து ராஷ்டிரத்தை 2023-க்குள் அமைத்துவிட பா.ஜ.க அரசு துடியாய் துடிக்கிறது.
இந்துத்துவத்தை சட்டபூர்வமாக கட்டமைப்பதற்கான முன்னோட்டமே இக்குடியுரிமைத் திருத்தச் சட்டம்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் கூறுவது என்ன?
தேசியக் குடியுரிமைப் பதிவேடு: அசாம் மாநிலத்தில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை அசாம் மக்களிடையே எழுந்தது. இதையொட்டி 1985 இல் இந்திய அரசுக்கும் அசாம் மாணவர் அமைப்புக்கும் இடையே ஓர் ஒப்பந்தமும் உருவானது. இவ்வொப்பந்தத்தின்படி, 1971 மார்ச் 24- க்குப் பிறகு அசாம் மாநிலத்தில் குடியேறியவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என ஏற்கப்பட்டது. அதனடிப்படையில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்ற தேசியக் குடியுரிமைப் பதிவேடு தயார் செய்யப்பட்டு, கணக்கெடுக்கப்பட்டது. போதிய ஆவணங்கள் இல்லை என்று காரணம் காட்டி இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி முதல் முன்னாள் அசாம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டு, 19 இலட்சம் மக்கள் குடியுரிமை அற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
அசாமில் குடியேறியவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள் என்ற எண்ணத்தில் இந்தக் கணக்கெடுப்பை நடத்துவதில் பா.ஜ.க அரசு ஆர்வம் காட்டியது. ஆனால், குடியுரிமைக் கணக்கெடுப்பு ஓர் அதிர்ச்சியை அளித்தது. குடியேறியவர்களில் ஐந்து லட்சம் பேர் மட்டுமே முஸ்லிம்கள்; மற்றவர்கள் பெரும்பாலும் பிற நாடுகளிலிருந்து வந்த இந்துக்கள். இந்நிலையில் குடியேறிய அனைவரையும் துரத்தியடித்துவிடாமல், முஸ்லிம்களை மட்டும் வெளியேற்றுவதற்காக குடியுரிமைத் திருத்த மசோதாவை பா.ஜ.க. அரசு கொண்டு வந்து, நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டம் ஆகி, இது டிசம்பர் 13 முதல் நடைமுறைக்கு வருகிறது.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் சட்டபூர்வ ஆவணங்கள் இன்றி நுழைந்துள்ள இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் கிறித்தவர்கள் ஆகிய மதத்தவர்களில், 2014 டிசம்பர் 31 வரை குடியேறியவர்கள் இந்தியாவில் 6 ஆண்டுகள் வாழ்ந்து இருந்தாலே போதும்; எந்த ஆவணமும் இல்லாவிட்டாலும் இந்தியக் குடிமக்களாக ஏற்கப்படுவர். இந்த நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் எவ்வளவு ஆண்டுகள் இங்கே வாழ்ந்திருந்தாலும், அவர்களுக்குக் குடியுரிமை கிடையாது.
வந்தேறிய இந்துக்களுக்கு குடியுரிமை தரப்படும்; ஆனால் இந்துக்கள் என்ற வரையறைக்குள் வரக்கூடியவர்களான, இலங்கையில் இனப்படுகொலைக்கு ஆளாகி, ஈழத்திலிருந்து விரட்டப்பட்டு, சொத்துகளை இழந்து, உறவுகளை இழந்து, 1990 முதல் அகதிகள் முகாம்களில் முடங்கி ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் 70,000 ஈழத்தமிழர்கள், இந்துக்களாக இருந்தாலும் அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடையாது.
இந்தியாவை ஒட்டிய எல்லைப்புற நாடுகள் என்றால், இலங்கை, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுளும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்நாடுகள் சேர்க்கப்படவில்லை. இலங்கையைச் சேர்த்தால் தமிழர்களுக்கும் குடியுரிமை கொடுக்கவேண்டிவரும். மியான்மர் என்ற பர்மாவைச் சேர்த்தால் ரோஹிங்கியர் என்ற முஸ்லிம்களுக்குக் குடியுரிமை தர வேண்டி வரும். பூட்டான் பட்டியலில் சேர்க்கப்பட்டால், கிறித்தவ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டி வரும். இதைத் தவிர்ப்பதற்காகவே இந்த நாடுகள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
ஈழத்தமிழர்கள் 5 லட்சம் பேருக்கு, முனைமே குடியுரிமை வழங்கி விட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தவறான தகவலைத் தருகிறார். இதற்கு முன்பு லால்பகதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமராக இருந்த காலத்தில் இலங்கையில் குடியுரிமை மறுக்கப்பட்ட 4,61,000 இந்தியத் தமிழர்களுக்கும், இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 74,000 இந்தியத் தமிழர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது. ஆனால் 1990-களிலிருந்து அகதிகள் முகாமில் முடங்கி இருக்கக்கூடிய ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை இன்று வரை வழங்கப்படவில்லை.
இந்தியாவில் முஸ்லிம்களையும், தமிழர்களையும் தங்களுடைய பகைச் சக்திகளாக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ மதவெறி அமைப்புகள் கருதுகின்றன.
இந்தியக் குடியுரிமை பற்றி சட்டமியற்ற நாடாளுமன்றம் அதிகாரம் பெற்றிருக்கிறது. இந்தியக் குடியுரிமைச் சட்டம் -1955 மதரீதியான குடியுரிமையை ஏற்கவில்லை. இந்தியாவில் 11 ஆண்டுகாலம் தொடர்ந்து வாழ்ந்திருந்தால் அவர்கள் குடியுரிமை பெற வாய்ப்பளிக்கிறது. எம்மதத்தவராக இருந்தாலும் வாய்ப்பை சமமாகவே அளிக்கிறது. இந்திய அரசியல் சட்டப் பிரிவு -14 மத அடிப்படையிலான பாகுபாட்டை ஏற்கவில்லை. சட்டத்தின் முன் யாவரும் சமம் என்றே கூறுகிறது.
மத அடிப்படையில் குடியுரிமை என்பது இந்தியா இதுவரை அறியாதது. அது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மதத்தின் பெயரால் ஒரு பகுதியினருக்கு குடியுரிமை வழங்கவும், இதரர்களுக்கு குடியுரிமையை மறுக்கவும் முற்படுகிறது.
குடியுரிமைச்சட்டத்திருத்தத்தின் சாரம் இதுதான்.
31 டிசம்பர் 2014 -க்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் அத்தனை பேரும் இந்தியக் குடிமக்கள், முஸ்லிம்கள் மற்றும் ஈழத்தமிழர் தவிர. அதாவது, இஸ்லாமியர் அல்லாதவர்கள் மற்றும் தமிழர் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்.பாகிஸ்தானிலிருந்து சிறுபான்மையர் துன்புறுத்தப்பட்டு இங்கு வந்து இருப்பதாக இந்திய அரசு கூறுகிறது. இஸ்லாமிய நாடாகிய பாகிஸ்தானில், பிற முஸ்லிம்களாகிய அகமதியர்கள், சூபிகள் போன்ற சமூகத்தினர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு ஓடிவந்துள்ளனர். மத அடிப்படையில் அவர்களுக்குக் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் மக்களைப் பாகுபடுத்தும் இசசட்டத் திருத்தத்தை எதிர்த்து, சாதி கடந்து, மதம் கடந்து, மக்கள் போராடி வரும் நிலையில், சமயச் சார்பற்ற மரபுக்குச் சொந்தமான தமிழகத்திலிருந்து சென்ற அ.தி.மு.க., பா.ம.க. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இச்சட்டத் திருத்தத்தை ஆதரித்து இம்மசோதாவை நிறைவேற்றியுள்ளது தமிழகத்தை அவமானத்தால் தலை குனிய வைத்துள்ளது.
இன்று, இந்தியா முழுவதும் பெரும் போராட்டச்சூழல் எழுந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். டில்லியில், ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி காவல் துறை நுழைந்து, பேராசிரியர்களையும், மாணவர்களையும் தாக்கியுள்ளது. மேற்குவங்கத்தில் இணையதளச் சேவை முடக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் கடும் எதிர்ப்பைக் காட்டி வருகின்றன.
மாணவர்கள் மற்றும் போராடும் மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இது பாசிச அரசின் அரச பயங்கரவாதம் ஆகும். இதை எதிர்த்து நிற்க வேண்டிய கடமை சனநாயகத்திலும், சமத்துவத்திலும் நம்பிக்கையுடைய மக்களாகிய நமக்கு இருக்கிறது.
பா.ஜ.க. மற்றும் இந்துத்துவ ஆதரவை வலுப்படுத்தும் வகையில் பிற நாடுகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் குறிப்பிட்ட மாநிலங்களுக்குள் பெரிய அளவில் இந்துத்துவ ஆதரவாளர்களைக் கொண்டு வந்து குடியேற்றி வரும் வேளையில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டு வருகிறது. திட்டமிட்டே இந்துமதவாத ஆதரவு சக்திகளைக் கொண்டுவந்து குவிக்கிறது. எதிர்காலத்தில் மண்ணின் மக்களின் மொழி, பண்பாடு, பொருளாதாரம் ஆகியவற்றை அடியோடு ஒழித்துக் கட்டும் பேரபாயத் திட்டம் இதற்குள் ஒளிந்திருக்கிறது.
மத அடிப்படையிலான குடியுரிமைச் சட்டத் திருத்தமும் அதை நடைமுறைப்படுத்த ஏவிவிடப்பட்டுள்ள காவல்துறைத் தாக்குதல்களும், இந்திய இராணுவத்தைப் பல இடங்களில் களமிறக்கி இருப்பதும் இந்திய அரசபயங்கரவாதத்தின் அடையாளங்களாகும். இதை இந்தியச் சமூகமும், தமிழ்ச் சமூகமும் ஒருபோதும் ஏற்காது.
இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களின் வெப்பத்தைத் தாங்க முடியாத
உள்துறை அமைச்சர் அமித் ஷா "தேவைப்பட்டால் வடகிழக்கு மாநிலங்களின் கவலையைப் போக்கும் வகையில் இந்தச் சட்டத் திருத்தத்தில் இன்னும் சில மாற்றங்களைச் செய்ய வாய்ப்புள்ளது" எனக் கூறுகிறார். (ஆனால், தன் கருத்தை மாற்றிக்கொண்டு இச்சட்டத்தை அப்படியே நடைமுறைப்படுத்தும் தன் நிலைப்பாட்டை மீண்டும் அறிவித்து விட்டார்.)
மதங்களின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் இத்திருத்தச் சட்டத்தில் சிறு திருத்தம் செய்வதை நாம் ஏற்க முடியாது. இத்திருத்தச் சட்டம் முழுவதுமே உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் பெரும் போராட்டத்தை நடத்தும் வகையில், தமிழக மக்கள் சாதி, மதம் மற்றும் அரசியல் கட்சி என்ற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு, போராட்டக் களத்திற்கு வரவேண்டுமென்று வேண்டுகிறோம்.
--பேராசிரியர் த.செயராமன்
வரலாற்றுத்துறை
17.12.2019

No comments:

Post a Comment