Sunday, 29 December 2019
ஒர் அரசனின் குணமும் அதுதானே…?) -
எருக்கு – மருத்துவ பயன்கள்
தேவேந்திரகுல வேளாளர் ஆன்மீகப் பாரம்பரியம்
Saturday, 28 December 2019
இந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..?
சிங்கம் மற்றும் புலி இவைகளை பற்றி சில இயல்பான விஷயங்கள்
Friday, 27 December 2019
ஊராட்சி மன்ற அதிகாரங்கள் | கிராமசபை கூட்டம் | powers of panchayati raj Gram Sabha meeting
Thursday, 26 December 2019
Monday, 23 December 2019
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 11
செய்யவே கூடாத பாவங்களைக்கூட, அன்றாட வேலையாகச் செய்வது இந்தக் காலத்து இயல்பாகிவிட்டது. உடலுக்கு சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) வேண்டும் என்பதற்காக மாடுகளின் வாழும் உரிமையையே ஒழித்துக்கட்டுவது, அத்தகைய பாவங்களில் ஒன்று. `பாலில் சுண்ணாம்புச்சத்து மிகுதியாக உள்ளது’ என்ற அறிவிப்பால், நாம் பெற்றவை சரிசெய்ய இயலாத நோய்கள்; இழந்தவையோ மீட்க இயலாத செல்வங்கள்.
கன்றுகளுக்கான பாலைச் சுரண்டாமல், மிகக் குறைவாக மட்டுமே பால் பீய்ச்சுவதுதான் நமது மரபு. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்னர், பால் அருந்தும் வழக்கம் மிகமிகக் குறைவாக இருந்தது. இப்போதுதான் லிட்டர்கணக்கில் பால் வாங்கும் பழக்கம் உள்ளது. அந்தக் காலத்தில், பாலை விலைக்கு விற்பதே பாவம் எனக் கருதினார்கள். நோயுற்றோருக்கு மருந்தாகவும், தவிர்க்க இயலாத சூழல்களில் தாய்ப்பாலுக்கான மாற்றாகவும் பால் பருகப்பட்டது.
தயிர், வெண்ணெய், நெய் ஆகிய பால் பொருட்கள் மட்டும் பரவலாகப் பயன்படுத்தப் பட்டன. வெண்மைப் புரட்சி என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல், நமது மரபில் இருந்த அறக்கொள்கைகளை எல்லாம் வீழ்த்திவிட்டு, மாடுகளுக்கு எதிரான எல்லா பாவங்களையும் நியாயப்படுத்திவிட்டது.
`எல்லோருக்கும் பால் உணவு’ என்பது அந்தப் புரட்சியின் மந்திரம். அதை உச்சரித்த வித்தகர்கள், பல்வேறு ஆய்வறிக்கைகளைத் தயாரித்து வெளியிட்டார்கள். `ஒட்டுமொத்த சமூகத்திலும் சத்துக் குறைபாடு உள்ளது. எல்லோரும் அதிக அளவில் பால் பருகினால்தான் அந்தக் குறை நீங்கும்' என்றும் அந்த அறிக்கைகள் முழங்கின.
நமது சமூகத்தில் இருந்த பெரும்பாலான மாட்டு வகைகள், ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் அளவில் மட்டும் பால் சுரக்கும் தன்மைகொண்டவை. அந்தக் காலத்தில், மாடு வளர்ப்போர் அதிகமாக இருந்தனர்; பால் சுரப்பு அளவும் தேவைக்கு ஏற்ப இருந்தது. வெண்மைப் புரட்சியின் செயல் திட்டப்படி, ஒரு நாளைக்கு 20 லிட்டர் வரை சுரக்கும் மாட்டு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன.
அந்த மாடுகள் நம் ஊரில் உள்ள புற்களையும் புதர்களையும் மட்டும் மேய்ந்தால், நோயுற்றுச் செத்துவிழக்கூடியவை. ஆகவே, அவற்றுக்கான தீவன நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அந்தத் தீவனங்களுக்காக மக்காச்சோளம் போன்ற அயல்நாட்டுப் பயிர்கள் அறிமுகம் செய்யப்பட்டன. காட்டில் கிடைக்கும் புற்களையும் வைக்கோலையும் மேய்ந்துவிட்டு, அற்புதமான உணவாகிய பாலைச் சுரந்துகொண்டிருந்த நமது பசுக்கள், முற்றிலும் ஒதுக்கித்தள்ளப்பட்டன. முழுக்க முழுக்க நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே உண்டு வாழும் அயல் வகை மாடுகள் போற்றி வளர்க்கப்பட்டன.
`பால் சுரப்பு’ என்பது, இயற்கையாகச் சுரக்கும் பாலைக் குறிக்கும் சொல். வெண்மைப் புரட்சி எனும் மாய நிகழ்வுக்குப் பிறகு, ‘பால் உற்பத்தி’ என்ற சொல் மிக நேர்த்தியாக நிலைநாட்டப்பட்டது. சீப்பு, உள்ளாடை, குப்பைக்கூடை போன்றவை உற்பத்தி செய்வதைப்போல பாலும் `உற்பத்தி’ செய்யப்பட்டது. எல்லா உயிரினங்களுக்கும் உணவு படைக்கப்படுகிறது. ஆனால், இவர்களோ பாலை `உற்பத்தி’ செய்கிறார்கள்.
இந்தச் சொல் மாற்றம் மிகக் கூர்மையானதுதான். ஏனெனில், இவர்கள் பசு எனும் உயிரினத்திடம் இருந்து பாலைப் பகிர்ந்துகொள்ளவில்லை; பசுவின் உடலில் இருந்து பாலைத் தயாரிக்கிறார்கள்.
இயற்கையாக பால் சுரப்பதற்கு, பசுவின் மடியைக் கன்று முட்டி மோதி ஊட்ட வேண்டும். பசுக்களைத் தடவிக்கொடுத்து, அவற்றோடு பேசிக்கொண்டே கன்றுகளை ஊட்டவைத்து, பால் சுரந்ததும் பீய்ச்சத் தொடங்குவது நம் மரபு.
இப்போது பால் சுரப்பதற்குக் கன்றுகளே தேவை இல்லை; பசுக்களின் கழுத்தில் ஓர் ஊசியைக் குத்தினால் பால் சுரக்கிறது. பாலைக் கறப்பதற்கு மனிதர்கள் தேவை இல்லை; இயந்திரங்களே போதும். `பசுவின் கழுத்தில் ஊசி, மடியில் இயந்திரம்’ இந்தக் காட்சியைக் கற்பனை செய்துபாருங்கள். குப்பைக்கூளங்களை உறிஞ்சி எடுக்கும் இயந்திரம்போல, ஓர் உயிரினத்தின் மடியில் இயந்திரம் பாலை உறிஞ்சுகிறது. இதுதான் ‘பால் உற்பத்தி’ எனும் நவீனத்தின், விபரீதச் சொல்லாடலின் உண்மை முகம். உங்கள் மனதுக்கு இது நியாயமாகத் தெரிகிறதா?
எந்தப் பசுவும் இப்போது உடலுறவுகொள்வது இல்லை என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். ஆணும் பெண்ணும் புணர்ச்சியில் ஈடுபட்டு உயிர்கள் பெருக வேண்டும் என்பது படைப்பு விதி! இரு உயிர்கள் இன்பமாக இருந்தால், அங்கே மேலும் பல உயிர்களை அனுப்பிவைப்பதுதான் படைப்பவரின் குணம். நவீன மேதைகளின் பேராசைச் செயல்களால், மாடுகளின் உடலுறவு கொள்ளும் உரிமை முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது.
பசுக்களின் பிறப்புறுப்பில் விந்து ஊசிகளைச் செலுத்துவதுதான் வெண்மைப்புரட்சியின் புதிய தொழில்நுட்பம். வேதிப்பொருட்கள் அடங்கிய தீவனங்கள்தான் இப்போதைய மாடுகளின் உணவு. அவ்வப்போது செலுத்தப்படும் மருந்து ஊசிகள்தான் அவற்றின் உடல்நலப் பராமரிப்பு. காலையும் மாலையும் கழுத்தில் குத்தப்படும் ஊசிகள்தான் பால் சுரப்புக்கான தூண்டுதல். மடிக்காம்புகளை உறிஞ்சி எடுக்கும் இயந்திரங்கள்தான் இந்தக் காலத்துக் கன்றுக்குட்டிகள். பிறப்புறுப்பில் செலுத்தப்படும் விந்து ஊசிகள்தான் காளைகளின் ஆண்குறிகள்.
இவ்வளவுக்கும் பிறகு உற்பத்தி செய்யப்படும் பாலைத்தான் நீங்கள் பருகிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு எல்லாம் உற்பத்திசெய்யப்பட்ட பால், பல நாட்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டு, மேலும் பல வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டு, பல்வேறு `கலப்புகளும் சுத்திகரிப்புகளும்’ செய்யப்பட்டுத்தான் உங்களை வந்தடைகின்றன என்பதையும் குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் வீதியில் வாழ்ந்த பால்காரர் பாலில் நீர் கலந்தார் என்பதற்காகத்தான், பாக்கெட் பால் வகைகளைப் போற்றி வளர்த்தீர்கள். இப்போது பாலில் நீர் கலப்பது இல்லை; யூரியா உள்ளிட்ட வேதி நஞ்சுக்களைத்தான் கலக்கிறார்கள்.
இந்த இடத்தில் நான் கேட்க விரும்பும் கேள்வி என்னவெனில், ‘சுண்ணாம்புச்சத்து நிறைந்த பால் உற்பத்தி பொங்கி வழியும் இந்த நாட்டில், ஏன் எலும்புச்சிதைவு மற்றும் பற்சிதைவு நோயாளிகளின் எண்ணிக்கை பெருகுகிறது?’
ஒரே ஒரு தேநீர் வாங்கித் தருபவரைக்கூட நன்றியோடு பார்க்கும் கூலித் தொழிலாளர்கள்தான், மூட்டைகளைச் சுமக்கிறார்கள்; சாலைகளை வெட்டுகிறார்கள்; சாக்கடைகளை அள்ளுகிறார்கள். `சத்துக்களுக்காக’ பாலை உறிஞ்சி எடுக்கும் சமூகம் மூட்டுவலியுடனும் பல்வலியுடனும் நாட்களை நகர்த்திவருகிறது.

‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்பது மூடநம்பிக்கை அல்ல... உண்மையான அறிவியல். மிகக் குறைவான அளவு பால் அருந்திய காலத்தில் வாழ்ந்த மக்கள், கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடும் அளவுக்கு வலிமையுடன் இருந்தனர். விடிந்தது முதல் அடைவது வரை பால் பருகும் இந்தக் கால மனிதர்களோ, காலை மாலை நடப்பதைக்கூட பெரும் பயிற்சியாகச் செய்கின்றனர். காரணம், மிக எளிமையானதுதான்... வலுவான பசுக்கள் தரும் பால், வலுவான மனிதர்களை உருவாக்கும். எல்லா வகையிலும் துன்பத்தில் உழலும் பசுக்களின் பால், துன்பங்களைத்தான் தாங்கியிருக்கும். இதுதான் அறிவியல்; இதுதான் அறவியல்.
இந்த அறச் சிந்தனையை நிறுவனங்களால் ஒப்புக்கொள்ள இயலாது. ஏனெனில், பால் எனும் `பொருள்’ மீது பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி தொழில் செய்கின்றன அந்த நிறுவனங்கள். பால் இப்போது உணவு அல்ல, வணிகப்பண்டம். மண்புழுக்களையும் பிள்ளைப்பூச்சிகளையும் கொலை செய்துவிட்டு விவசாயம் செய்தால் உணவு நஞ்சாகும். கோழிகளைத் துன்புறுத்தினால் இறைச்சி நஞ்சாகும். பசுக்களையும் காளைகளையும் வதைசெய்து பால் கறந்தால் அந்தப் பாலும் நஞ்சே!
மீண்டும் கூறுகிறேன்... இந்தப் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும், கூடிவாழப் படைக்கப்பட்டவை. சக உயிரினங்களை வாட்டிவதைத்து உற்பத்தி செய்யப்படும் ஒரே ஒரு பொருள்கூட, மனிதர்களுக்கு நன்மை தராது. மனித உடலில் மிகுதியான சுண்ணாம்புச்சத்து சேர்ந்தால், சிறுநீரகங்கள் சீரழியும் சூழல் உருவாகும். சில மணித்துளிகள் கண்களை மூடி சிந்தித்துப் பாருங்கள். உங்களைச் சுற்றி எவ்வளவு சிறுநீரக நோயாளிகள் இருக்கிறார்கள்!
ஆண், பெண் ஆகிய இரு பாலினங்கள் புணர்ச்சியில் ஈடுபடுவதைக்கூட நவீன அறிவியல் தடுக்கும் என்றால், இதற்கான தண்டனையே கிடைக்காது என எல்லோரும் நம்புகிறீர்களா? வினைப் பலன் என்பது, கடவுளின் கணக்குப் புத்தகத்தில் எழுதப்படுவது அல்ல; நமக்கு நாமே எழுதிக்கொள்ளும் விதி. எந்தச் செயல் செய்தாலும் அதற்கான பலனை நாம் அனுபவித்துத்தான் தீர வேண்டும்.
ஓர் உயிரினத்தின் உணவு உண்ணும் உரிமை, உடலுறவு உரிமை, தான் ஈன்ற கன்றுக்குப் பால் கொடுக்கும் உரிமையை எல்லாம் மறுப்பது தீவினைகள்தான். இவற்றுக்கான பலன்களையும் இந்தச் சமூகம் அனுபவித்துக்கொண்டுதான் வருகிறது என்பது என் கருத்து.
ஆயம் என்ற சொல்லுக்கு, ‘கூடி வாழும் இடம்’ எனப் பொருள். ஆயர் என்றால், ‘கூடி வாழ்வோர்’ எனப் பொருள். ஆடு, மாடுகளின் பட்டியும், அவற்றை மேய்க்கும் மனிதர்களின் குடில்களும் ஒரே வேலிக்குள்தான் இருக்கும். ஆக, ஆயம் என்பது ஆடு, மாடு, மனிதர் ஆகிய மூன்று உயிரினங்களையும் சேர்த்துக் குறிக்கும் சொல். நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆயர்களாக வாழ்ந்துள்ளோம். மாடுகளையும் ஆடுகளையும் நமது குடும்ப உறுப்பினர்களாகத்தான் கருதி வாழ்ந்தோம்.
எருதுகள் பூட்டிய வண்டிகளை முல்லை நிலத்துப் பெண்கள் ஓட்டிச் சென்று, மருதம் மற்றும் நெய்தல் நிலங்களில் வெண்ணெய், தயிர் விற்றதாக சங்கப் பாடல்கள் குறிக்கின்றன. நமது ரத்தத்தில் பால் தொழில் ஊறியுள்ளது. ஆயிரக்கணக்கான மாடுகளை வளர்த்து, கன்றுகளுக்குக் கொடுத்து, நாமும் பால் பெற்று வாழ்ந்த காலம்தான் வரலாற்றில் நெடியது.
இப்போது நாமும் நன்றாக இல்லை; நம் கால்நடைகளும் நன்றாக வாழவில்லை. இந்த நிலையை மாற்ற இயலும். அயல்வகை மாடுகளின் பாலைப் பருகும் வழக்கத்தில் இருந்து விடுபடுங்கள். தரமான வெண்ணெய் விற்பனை செய்வோரைத் தேடிக் கண்டறியுங்கள். தனிப்பட்ட முறையில் பால் விற்பவர்களை ஆதரியுங்கள். அவர்கள் தரும் பால் தரம் இன்றி இருந்தால், அவர்களிடம் நேரடியாகப் பேசுங்கள்.
பால் கொள்முதலின் அளவைக் குறையுங்கள். வீட்டிலேயே தயிருக்கு உறை ஊற்றுங்கள். தனிப்பட்ட முறையில் வெண்ணெய் விற்பனை செய்வோரிடம், வெண்ணெய் வாங்கி வீட்டில் நெய் உருக்கிப் பயன்படுத்துங்கள். இந்த இரு வழக்கங்களையும் நீங்கள் கடைப்பிடித்தால், இந்தச் சூழலில் தலைகீழான மாற்றங்கள் உருவாகும். தேநீர் போன்ற பானங்களில் பால் சேர்த்துப் பருகுவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக, நாட்டுப் பசுக்களைப் போற்றிப் பாதுகாக்கத் தொடங்குங்கள். பசுக்களை மட்டும் அல்ல நாட்டுக் காளைகளையும் பாதுகாக்க முன்வாருங்கள். முருங்கைக்கீரையையும் காயையும் ரசமாக வைத்து அன்றாடம் பருகினால், கிடைக்கும் சத்துகளுக்கு அளவே இல்லை.
நமது மரபில் எல்லா உணவுகளும் சத்துப் பெட்டகங்கள்தான். உணவுத் துறையில் உள்ள நவீனத் தொழில் நிறுவனங்களின் பிடியில் இருந்து நமது மரபு உணவுப் பழக்கங்களை மீட்டெடுத்தாலே, நிம்மதியான வாழ்க்கையை வாழ இயலும்!
இனிமேல் யாரும் மாட்டுப்பால் குடிக்கலாமா, குழந்தைக்கு பால் கொடுக்கலாமா என்று கேள்வி கேட்காதீர்கள் 🖕🖕🖕
🖕🖕🖕
உடல் ஆரோக்கியத்தை பலப்படுத்தும் சீரகம்
வெந்தயம்* *வெந்த+அயம்*அயம் என்றால் இரும்பு
Sunday, 22 December 2019
Saturday, 21 December 2019
கலப்பட உணவை கண்டறிவது எப்படி?
கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது.. இது தெரியாமல் அதை காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம். தவறான வழியில் காசு சம்பாதிக்க மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது?
இதோ பட்டியல்
பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.
கலப்படமற்ற பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்.
சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.
ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள் இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.
மஞ்சள் தூளில்,பருப்பு வகைகளில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறாகள். அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.
மிளகாய் தூளில் மரப்பொடி, செங்கல் பொடி, Rodamine Culture மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள்.
நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும்.செங்கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் கிளாசின் அடியில் போய் செட்டில் ஆகிவிடும். 2 கிராம் மிளாய் பொடியில் 5 ml acetone சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம் தோன்றினால் Rodamine Culture கலப்படத்தை உறுதி செய்யலாம்.
காபித் தூளில் சிக்கரி கலக்கிறார்கள்.குளிர்ந்த நீரில் கலந்து குலுக்கினால் காபித்தூள் மிதக்கும் சிக்கரி கீழே படிந்து விடும்.
கொத்துமல்லி தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும்
கிராம்பில் அதன் எண்னெயை எடுத்து விட்டிருப்பார்கள். எண்ணை நீக்கப்பட்ட கிராம்பு சுருங்கி இருக்கும்
சீரகத்தில் புல்விதை நிலக்கரிதூள் கொண்டு வண்ணம் ஊட்டப் பட்டிருக்கும். கைகளில் வைத்து தேய்த்தால் விரல்களில் கருமை படியும்.
நெய்யில் மசித்த உருளக்கிழங்கு, வனஸ்பதி சேர்த்திருப்பார்கள். 10-மி.லி.ஹைட்றோ குளோரிக் அமிலத்துடன் 10-மி.லி உருக்கிய நெய் கலந்து அதோடு ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்கவும் வனஸ்பதி கலந்திருந்தால் பத்து நிமிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறும்.
வெல்லத்தில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறார்கள்.அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.
ரவையில் இரும்புத் தூள் கலக்கிறார்கள் காந்தத்தை அருகே காட்டினால் இரும்புத்தூள் ஒட்டிக்கொள்ளும்
பாக்குத்தூளில் மரத்தூள் மற்றும் கலர் பொடி சேர்க்கிறார்கள் நீரில் கரைத்தால் தண்ணீரில் வண்ணம் கரையும்
பாலில்,நெய்யில் மசித்த உருளக்கிழங்கு அல்லது பிற மாவுகள் கலக்கிறார்கள். கலப்பட பாலில் ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் சேர்த்தால் மர வண்ண டிஞ்சர் நீல வண்ணம் ஆகும். பாலில் யூரியா கலப்படம் செய்திருந்தால் 5 ml பாலில் இரண்டு துளி bromothymol blue சொலுசன் கலந்து பத்து நிமிடம் கழித்து நீலநிறமானால் யூரியாகலந்திருப்பதை உறுதிசெய்யலாம். பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால் ஒரு துளி பாலை வழ வழப்பான செங்குத்து தளத்தில் வழிய விட்டால் தூய பால் வெள்ளை கோட்டிட்டது போல் வழியும் கலப்பட பால் எந்த அடையாளமும் ஏற்படுத்தாது உடனடி வழிந்து விடும். டிடெர்ஜென்ட் பவுடர் எண்னெய் எல்லாம் சேர்த்து பால் போன்ற செயற்கை பாலையும் உருவாக்கி விடுகிறார்கள்.
தேயிலைத்தூளில் பயன்படுத்திய பின் உலத்திய தூள் செயற்கை வண்னமூட்டிய தூள் கலக்கிறார்கள். ஈர, வெள்ளை பில்டர் தாளில் தேயிலைத் தூளை பரப்பினால் மஞ்சள், சிவப்பு, பிங்க் புள்ளிகள் உண்டானால் அதில் கலர் சேர்த்திருக்கிறார்கள்.இரும்புத்தூள் சேர்த்திருந்தால் காந்தம் மூலம் கண்டுபிடிக்கலாம்
சமையல் எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலக்கிறார்கள். எண்ணெயுடன் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சேர்த்து சிறிது சிறிதாக ஃபெர்ரிக் க்ளோரைடு கலவையில் கலந்தால் எண்ணெயில் ஆர்ஜிமோன் கலப்படமிருந்தால் அரக்கு வண்ண படிவு உண்டாகும்.
குங்குமப்பூவில் நிறம் மற்றும் மணம் ஏற்றப்பட்ட உலர்ந்த சோள நார்கள் கலக்கிறார்கள்.தூய குங்குமப்பூ எளிதில் முறியாது கடினமாக இருக்கும். கலப்பட நார் எளிதில் முறிந்து விடும்.
ஜவ்வரிசியில் மணல் மற்றும் டால்கம் பவுடர் சேர்கிறார்கள். வாயிலிட்டு மென்றால் கல் நற நறவென்றிருக்கும். தண்ணீரில் வேக வைக்கும் போது தூய ஜவ்வரிசி பருத்து பெரிதாகும்.நல்ல மிளகில் உலர்த்தப்பட்ட பப்பாளி விதைகள், கருப்பு கற்கள் சேர்க்கிறார்கள். முட்டை வடிவ கரும்பச்சை பப்பாளி விதைகள் சுவையற்றவை.
தேங்காய் எண்ணெயில் பிற எண்ணெய்கள் கலக்கிறார்கள். தேங்காய் எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் உறையும் ஆனால் கலந்த .பிற எண்ணெய் உறையாது தனித்து இருக்கும்
"கம்பு "வில் பூஞ்சைகள் கலக்கிறார்கள். உப்பு நீரில் பூஞ்சைகள் மிதக்கும்.
இலவங்கப்பட்டையுடன் (தால்சினி) தரங்குறைந்த கருவாய் பட்டை (கேசியா) வில் வண்ணம் சேர்த்து கலக்கிறார்கள். சேர்க்கப்பட்ட வண்ணம் நீரில் கரையும்.
சாதாரண உப்பில் வெள்ளைக் கல் தூள், சுண்ணாம்பு கலக்கிறார்கள் உப்பை தண்ணீரில் கரைத்தால் சுண்ணாம்பு கலப்படம் இருந்தால் தண்ணீர் வெள்ளை நிறமாகும்.தூய உப்பு நிறமற்று இருக்கும்.
தேனில் சர்க்கரை பாகு கலப்படம் செய்கிறார்கள்.
தூய தேனில் நனைத்த பஞ்சுத்திரியை தீயில் காட்டினால் எரியும் கலப்பட தேனில் எரியாது வெடி ஒலி உண்டாகும்.
கடலை எண்ணெயில் பருத்திக்கொட்டை எண்ணெய் கலக்கிறார்கள் .2.5 மி.லி ஹால்பென் கரைசல் சேர்த்து லேசாக மூடி பொருத்தி கொதிநீரில் 30 நிமிடம் சூடு படுத்தினா கலப்படமிருந்தால் ரோஸ் நிறமுண்டாகும்
ஐஸ் கிரீமில் வாஷிங் பவுடர் கலக்கிறார்கள். சில துளி எலுமிச்சை சாறு அதில் விட்டால் குமிழ்கள் ஏற்பட்டால் இதை உறுதி செய்யலாம்.
முட்டையில் டீ டிக்காசன் மூலம் சாயம் ஏற்றி நாட்டு கோழி முட்டையாக விற்கிறார்கள்.
விழிப்புணர்வு மூலம் மட்டும் தான் இந்த தீமையை வேருடன் ஒழிக்க முடியும்.