"பத்தாயம்" "குதிர்"
25 ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமப்புறங்களில் மட்டுமிலலாது டெல்டா மாவட்ட நகரங்களில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பத்தாயம், குதிர் உள்ளிட்டவைகள் பயன்பாட்டில் இருந்தன.
பெரும் செல்வந்தர்கள் மட்டுமல்ல நிரந்தர வருமானம் ஈட்டக்கூடிய நடுத்தர வர்க்கத்தினரும், ஓரளவுக்கு வசதி படைத்தவர்களுமே கூட, கடைகளில் அரிசி வாங்குவதையே கவுர குறைவாக கருதிய கால கட்டம் அது.
நெல்லை வாங்கி பத்தாயம், குதிர் உள்ளிட்டவைகளில் கொட்டி வைத்து, அவ்வப்போது தேவைக்கேற்ப, ஆலைகளில் அரிசியாக அரைத்து பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
பத்தாயம், குதிர் இல்லாத விவசாயிகள், தங்களுடைய நெல்லை சாக்கு மூட்டைகளில் வைப்பதால் பனி மற்றும் மழைக்காலங்களில் ஈரப்பதம் ஊடுருவி நெல்லின் தரத்தை சீர்குலைக்கிறது.
கடுமையான கோடைகாலங்களில் வெப்பத்தின் தாக்கத்தால் கட்டு விடுதல் என்ற பிரச்னை உருவெடுத்து, நெல்லில் கோடுகள் உருவாகும். இதுபோன்ற நெல்லை அரைக்கும் போது குருணை அதிகரித்து, அரிசியின் அளவு குறையும். இதையெல்லாம் விட உச்சக்கட்ட பிரச்னை எலி தொந்தரவு. சாக்கு மூடடைகளை ஓட்டைப் போட்டு, ருசி பார்த்து வேட்டையாடிவிடுகிறது.
சாக்கு மூட்டைகளில் உள்ள நெல்மணிகள், அந்துப்பூச்சி களின் தாக்குதலுக்கும் ஆளாகிறது. இதுபோன்ற காரணங்களால் விவசாயிகள் தங்களுடைய உற்பத்தி நெல்லை இருப்பு வைத்துக் கொள்ள முடியாமல், அவசர கதியில் விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலை, வியாபாரிகள் குறுக்கு வழியில் பயன்படுத்தி, விவசாயிகளை சுரண்டுகிறார்கள். நெல் மணிகளை சேமித்து வைக்க முடியாததால், விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைநெல்லை, பல மடங்கு கூடுதல் விலை கொடுத்து வெளியில் வாங்குகிறார்கள்.
பத்தாயம், குதிர் இந்த இரண்டுமே பல அடுக்குகளாக அமைக்கப்பட்டிருக்கும். இதற்கான காரணம், பல அடி உயரம் கொண்ட பத்தாயம் அல்லது குதிரின் உச்சத்திற்கு சென்று அனைத்து மூட்டைகளையும் அவிழ்த்து நெல்லை கொட்டுவதென்பது அத்தனை எளிதான காரியமல்ல. ஒவ்வொரு அடுக்காக வைத்து நெல்லை நிரப்பிக் கொண்டே வந்தால் மிக எளிதாக வேலை முடியும்.
பத்தாயம்:
===========
மரத்தால் செய்யப்பட்டவை பத்தாயம். விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ப, குறைந்தபட்சம் 10, 20 மூட்டைகள் முதல் அதிகபட்சம் 100, 200 மூட்டைகளுக்கு மேல் கொள்ளளவு கொண்ட பத்தாயம் வைத்திருந்தார்கள்.
குதிர்:
======
மண்ணால் ஆன உறைகளை (உருளை) கொண்டு செய்யப்பட்டவை குதிர். ஒரு உருளைக்கும் அதன் மீதுள்ள இன்னொரு உருளைக்கும் இடையே உள்ள இடுக்குகளில் சேறு பூசப்படும். அனைத்து உருளை களும் அமைக்கப்பட்ட பிறகு இதன் மீது முழுமையாக சாணம் பூசப்படும். இதனால் எலி கடிக்காது. அவ்வபோது தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக நெல்லை வெளியில் எடுக்க, குதிரின் கீழ் பகுதியில் திறந்து மூடும் அமைப்பு இருக்கும்.
முழுமையாக நெல் வெளியில் எடுக்கப்பட்ட பிறகு, உறைகளை லேசாக அசைத்தாலே தனிதனியாக பிரித்து எடுத்து விட்டு, நெல்லை நிரப்பி மறுபடியும் அமைத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment