Showing posts with label கண்டங்கத்திரி. Show all posts
Showing posts with label கண்டங்கத்திரி. Show all posts

Tuesday, 9 February 2021

கண்டங்கத்திரி மூலிகையின் மருத்துவப் பயன்கள்

கண்டங்கத்திரி என்பது செடி வகையை சேர்ந்தது. தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் குப்பை மேடு, கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் மானாவாரியாக வளரக் கூடியது.செடி முழுவதும் முட்கள் இருக்கும். இதன் பூக்கள் நீல நிறத்தில் பூக்கும். சிறிய கத்தரிக்காய் வடிவிலான காய் காய்க்கும். பழுத்ததும் மஞ்சள் நிறமாக இருக்கும். கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான இதன் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணம் உடையவை.
பழத்தை உணவாக எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் சீராகும். கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்துச் சுருட்டு போலச் செய்து புகை பிடிக்க பல்வலி, பல் கூச்சம் தீரும். கண்டங்கத்தரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவ பண்பு கொண்டவை. கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி தலைவலி, வாத நோய்களுக்கு பூசி வர குணம் கிடைக்கும்.

பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டவை. எனவே, கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதோடை ஆகிய மூலிகைச் செடிகளின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் காயவைத்துப் பொடியாக்கவும். இந்த பொடியை தினமும் இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் தீரும். வறட்டு இருமலுக்கு கண்டங்கத்திரி வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 5 கிராம், கொத்தமல்லி 1 பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அரை லிட்டராக காய்ச்சி 4 முதல் 6 முறை 100 மில்லி வீதம் குடிக்க சீதளக் காய்ச்சல், சளிக் காய்ச்சல், நுரையீரல் காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து சுரங்களும் நீங்கும். இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து உடலில் தேய்த்து வர வேர்வை நாற்றம் அகலும்.

பாதவெடிப்புக்கு இலையை இடித்து சாறுடன் ஆளி விதை எண்ணெய் சம அளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசி வர வெடிப்பு மறையும். உடல் உஷ்ணம் காரணமாக சிறுநீர் பாதையில் எரிச்சலும் கடுப்பும் உண்டாகலாம். கண்டங்கத்திரி இலையை அம்மியில் வைத்து நைத்து சாறு எடுத்து, அதில் ஒன்றரைத் தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் இரண்டு மணி நேரத்தில் எரிச்சல், கடுப்பு நீங்கும்.குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து 2 வேளை கொடுக்க குணமாகும். கண்டங்கத்திரி வேர், ஆடாதோடை வேர், சுக்கு, திப்பிலி, ஓமம் போன்றவற்றை இடித்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுண்டக்காய்ச்சி காலை, மாலை குடித்து வர கபம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

கண்டங்கத்திரி பழத்தை மண்பாண்டத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து குழம்பு பதமாக இருக்கும் போது ஒரு பங்கு நல்லெண்ணெய் ஊற்றி மெழுகு பதம் வர காய்ச்சி வடித்துக் கொள்ளவும். இந்த கலவையை வெண் குஷ்டத்திற்கு தடவி வர குணம் கிடைக்கும் என சித்த மருத்துவ குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன. எதுவாக இருந்தாலும் சித்த மருத்துவர்களை அணுகி மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது.